நாட்டின் நற்பெயருக்குப் பெரும் களங்கம்! எனினும் ஜனாதிபதிக்கு வடக்கு மக்கள் உயர் கௌரவம்!! – இப்படிக் கூறுகின்றார் சமரசிங்க
இரணைமடு நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் நிலவும் உறுதியற்ற நிலைமை, பொருளாதாரத்திற்கும் நாட்டின் நற்பெயருக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா,
“நாடாளுமன்றத்தில் தற்சமயம் நிலவும் நெருக்கடிக்கு புதிய நாடாளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு கிடைக்கும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நாட்டின் செயற்பாட்டை வழமைக்குக் கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்” என்று குறிப்பிட்டார்.