மைத்திரி – மஹிந்த அமைச்சரவைக்கான நிதிகளும் முடக்கம்! – நாடாளுமன்றில் இன்று நிறைவேறியது பிரேரணை; 122 எம்.பிக்கள் பேராதரவு

மைத்திரி – மஹிந்த கூட்டணி அரசிலுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான சம்பளங்கள் மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூ டியது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்படி பிரேரணையை முன்வைத்து, சம்பிக்க ரணவக்க எம்.பி. உரையாற்றினார். ரஞ்சித் மத்தும பண்டார எம்.பியால் பிரேரணை வழிமொழியப்பட்டது.

குறுகிய நேர விவாதத்தின் பின்னர் நண்பகல் 12 மணியளவில் இலத்திரனியில் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போதே 122 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்டன. எதிராக ஒரு வாக்குக்கூட வழங்கப்படவில்லை. ஆளுந்தரப்பான மஹிந்த தரப்பு இன்றைய தினமும் சபை அமர்வைப் புறக்கணித்திருந்தது.

“அரசமைப்பின் 148ஆவது பிரிவின் கீ்ழ் நாடாளுமன்றமே அரச பொது நிதியைக் கட்டுப்படுத்துகின்றது. மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் கடந்த 15ஆம் திகதிக்குப் பின்னர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியத்தை பொது நிதியில் இருந்து வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.

அத்துடன் அரச பொது நிதியில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவோ, உள்நாட்டில் ஹெலிகளில் பயணிக்கவோ முடியாது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்று அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேரணையின் விபரம் இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *