சர்வாதிகாரபோக்கை சபாநாயகர் கைவிடும்வரை சபைஅமர்வில் பங்கேற்கமாட்டோம் – மஹிந்த அணி சூளுரை!
சபாநாயகர் கருஜயசூரிய தொடர்ந்தும் சர்வாதிகாரிபோலவே செயற்பட்டு வருகின்றார் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஸ் குணவர்தன குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றக்கட்டத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
” இன்றைய தினம் சபைஅமர்வை கூட்டுவதற்கு சபாநாயகர் பின்பற்றிய நடைமுறையானது நிலையியற்கட்டளைக்கு முரணானது. இதற்கு முன்னரும் அப்படியே நடந்தது. எனவே, நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, சபாநாயகர் பக்கச்சார்பின்றி செயற்படும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டோம்.
அரசமைப்பின் பிரகாரம் சபாநாயகர் செயற்படும்வரை, நாடாளுமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கப்போவதில்லை. இன்றைய தினம்கூட கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமான குழுவும் கூடவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் சபை எவ்வாறு கூடமுடியும்?” என்று தினேஸ் கேள்வி எழுப்பினார்.