மக்களே அவதானம் ! மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு!!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
உயிரியல் குறியீட்டில் 20 வீத நுளம்புப் பெருக்க அதிகரிப்பு தற்போது காணப்படுவதாக, பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விற்கு அமைய மேல், மத்திய மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும், நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, தமது வீட்டுச் சுற்றுச் சூழலையும், தொழில் புரியும் இடங்களையும் எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நுளம்புக் கடியிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆடைகள் மற்றும் கால் (மேஸ்) உறைகளை அணிவதுடன், தேவையான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், நஜித் சுமனசேன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.