குற்றவியல் பிரேரணைக்குப் பயந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தேன்! – உண்மையை ஒப்புக்கொண்டார் மைத்திரி
தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால்தான், கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதனை அவர், வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது உறுதி செய்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கு, நவம்பர் 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன்.
அதற்குக் காரணம், அதில் கடந்த மாதம் ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமரைப் பதவி நீக்கியும், புதிய பிரதமரை நியமித்தும் ஜனாதிபதி வெளியிட்ட இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளும் அரசமைப்புக்கு முரணானவை, செல்லுபடியற்றவை என்று கூறப்பட்டிருந்தது.
அந்தப் பந்தியை உள்ளடக்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால், நான் அரசமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமக்க நேரிடும். பின்னர் அது, எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம்.
அதனை நான் ஏற்றுக்கொண்டால், நான் அரசமைப்பை மீறிவிட்டதாக, எதிர்காலத்தில் என் மீது குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வர முடியும்” – என்றார்.