அடுத்துவரும் நாட்களில் ‘அந்தர்பல்டி’ அரங்கேறும் – பெரும்பான்மையை நிரூபிக்க தயார் ! சு.க. சூளுரை
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மைத்திரி – மஹிந்த கூட்டணி தயாராகிவிட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாடாளுமன்றத்தில் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்றும் தமது தரப்புக்கே அது இருக்கின்றது என்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர்.
எமது அணிக்கே பெரும்பான்மை இருக்கின்றது. அதை நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம். வசந்த சேனாநாயக்க மீண்டும் எம்முடன் கரம்கோர்த்துள்ளார். அடுத்துவரும் நாட்களிலும் மேலும் பலர் இணையவுள்ளனர்.
அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதி செயற்பட்டார். ஐக்கிய தேசியக்கட்சியே சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.” என்றார்.