இன்று மாலை 5 மணிக்குப் பின் தீர்ப்பு! உயர்நீதிமன்றின் முன் மக்கள் கூட்டம்!!
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இரண்டாவது நாளாகவும் இன்று காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்த்தரப்பு மற்றும் அரச தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவுபெற்றிருக்கின்றன.
இதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் அமர்வு இன்று மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரவொன்றைப் பிறப்பிப்பதற்காகவே உயர்நீதிமன்றத்தின் 502ஆம் இலக்க அறையின் அமர்வு மாலை 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்படுமா? அல்லது இன்றைய தினம் தீர்ப்புக் கிடைக்குமா? என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்குப் பின்னர் தெரியவரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எதிர்பார்த்து உயர்நீதிமன்றத்தின் முன் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.