சர்க்கார் படத்தில் விஜய்யின் நடிப்பையும் விஞ்சும் வகையில் மலையகத்தில் நடிக்கிறார் தொண்டா – விளாசித் தள்ளுகிறார் திகா!
சர்க்கார் படத்தில் தளபதி விஜய்யின் நடிப்பையும் விஞ்சும் வகையில் தொண்டமானின் நடிப்பு இருப்பதாகவும், ஆயிரம் ரூபாவை பெற்றுதருவதாக இ.தொ.காவினர் மக்களை ஏமாற்றிவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கட்சிதொண்டர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு உரையாற்றிய திகா மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் சரி, ஜனாதிபதியாக வந்தாலும் சரி சிpறுபான்மையினரான நாங்கள் இனைந்து மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். எனினும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ஒருவரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி கையாண்ட விதம்தான் படுமோசமானது. அதற்கு ஆதரவு வழங்கமுடியாது.
எங்களிடமும் கோடிகளைக்காட்டி பேரம்பேசினார்கள். ஆனால், ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்பட்டது. அமைச்சுப் பதவி இன்று வரும், நாளை போகும். ஆனால், தன்மானம் என்பது அவ்வாறு அல்ல.
நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் எவரும் செய்யதாக வேலைதிட்டங்களை
செய்துகாட்டினேன். நாங்கள் விதைவிதைக்க தற்போது வேறுயாரோ அறுவடைசெய்கின்றனர். இருந்தாலும் மக்களுக்கான அரசியலை நாம் கைவிடமாட்டோம்.
14 ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிப்போம். நான் மீண்டும் அமைச்சராவேன். தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என ஆறுமுகன் அறிவித்தார். அதனால்தான் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், மக்களை ஏமாற்றுவதற்கே அவரும், அவரின் சகாக்களும் முற்படுகின்றனர்” என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா