அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசு போர்க்கொடி!
இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்தமைக்கு வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா, பிரிட்டன் தூதுவர்கள் உட்பட வெளிநாட்டுத் தூதுவர்களை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சந்தித்தமை குறித்துத் தான் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது தேர்தல் மற்றும் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்து குற்றம்சாட்டி வந்துள்ளன. அவ்வாறான சூழ்நிலையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்க, பிரிட்டிஸ் தூதுவர்கள் தலையிடுவதை நீங்கள் எப்படிச் சகித்துக் கொள்கின்றீர்கள் என்பது புரியவில்லை? 2015இல் அப்போதைய அரசை வீழ்த்துவதில் மேற்குலகம் பங்களிப்பு வழங்கியது வெளிப்படையான விடயம்” எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.