நாடாளுமன்றத்துக்குள்ளும் மைத்திரி களையெடுப்பு! சபை முதல்வராக தினேஷ் நியமனம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்தத் தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்​போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நேற்றுக் கையளித்திருந்தது.

சபை முதல்வரும் ஐ.தே.கவின் மூத்த உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் கையொப்பத்துடனேயே குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, சபை முதல்வர் பதவியிலிருந்து லக்ஷ்மன் கிரியெல்லவைத் தூக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரி இறங்கினார் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *