மைத்திரி – மஹிந்த பக்கம் ‘பல்டி’யடித்த வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை! – கூட்டமைப்பு உயர்மட்டக் குழு தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்குக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இது தொடர்பில் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாகக் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து, நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கபடமாகப் பெறுவதற்கு புதிய அரசு முயல்கின்றது.
இந்த ஜனநாயக விரோத செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. கடும் எதிர்ப்பையும் நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்தச் சதி முயற்சிக்குப் பலியானமை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” – என்றுள்ளது.