நாலாபுறமும் அழுத்தம் வலுத்ததால் நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரி முடிவு! – மஹிந்தவா? ரணிலா? – 05ஆம் திகதி முடிவு வரும்
இம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தனக்கு அறியப்படுத்தியுள்ளார் என்று புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இம்மாதம் 5ஆம் திகதியே நாடாளுமன்றம் கூட இருந்தது. எனினும், அரசியல் நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு அதை 16ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார். மைத்திரியின் இந்த முடிவுக்குப் பல தரப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணுமாறு அரசியல் கட்சிகளும், வெளிநாட்டுத் தூதரகங்களும் கோரிக்கை விடுத்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்னும் 4 நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்றம் கூடிய பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய ஒப்புதல் வழங்கப்படும்.