கட்சி தாவிய எம்.பிக்கள் தலதாமாளிகையில் வழிபாடு – ரணில்மீது அஸ்கிரிய பீடம் அதிருப்தி!
“ ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருக்கு நாட்டைப் பற்றியோ அல்லது மக்களின் பிரச்சினைகள் குறித்தோ எவ்வித உணர்வுகளும் இருக்கவில்லை. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இணைவு நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும்” என்று அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் வண. வரகாகொட ஞானரத்ன தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க, பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே ஆகியோர் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அஸ்கிரிய பீடத்திற்கு சமூகமளித்து மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஞானரத்னவை சந்தித்து நல்லாசி பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ அரசியல் வாதிகள் எப்போதும் நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டுதல் வேண்டும் என்ற அடிப்படையில் வசந்த சேனாநாயக்காவும், ஆனந்த அலுத்கமகேயும் எடுத்த முடிவு நல்லது என கருதுகின்றேன்” என்றும் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.
சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனநாயக்க அங்கு உரையாற்றுகையில் ,
ஐ.தே.க வில் சேவை செய்வதற்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருடைய தலைமையிலான புதிய அரசில் மக்களுக்க அதிகமான சேவைகள் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றேன் என்று கூறினார்.