வித்தியா படுகொலை இடம்பெற்ற மண்ணில் மீண்டும் ஓர் அராஜகம்!
யாழ். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வல்லுறவுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அங்கு கள்ளச்சாரயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க நபர் அப்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
எனினும், அங்கிருந்து தப்பிய அப் பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஊர்காவல்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டை ஏற்று சந்தேகநபரைத் தேடி வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் போர்க்காலத்தில் இல்லாத அளவுக்கு இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
பெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி பெண்களின் தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.