மைத்திரி – மஹிந்த கூட்டு வேட்டை! அர்ஜுன ரணதுங்க கைது!!
பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே, அர்ஜுன ரணதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நேற்று மாலை சென்றிருந்தபோது, அங்கிருந்த மஹிந்த அணி ஆதரவு ஊழியர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
எனவே, இந்தச் சம்பவத்தைக் கண்டித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலங்கை சுதந்திரத் தொழிலாளர் சங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவை கைதுசெய்யும் வரை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பிரதமரான அதிருப்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுள் தனி அணி அமைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஈடுபட்டுள்ளார் எனவும், அர்ஜுன ரணதுங்க (சந்திரிகாவின் நம்பிக்கைக்குரிய சகா) கைதுக்கு அதுவும் ஒரு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.