மஹிந்த பெரும்பான்மையை நிரூபித்தால் எதிரணியில் அமர்வோம்! – ஐ.தே.க. அறிவிப்பு
மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில், எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்று சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ நாட்டில் சட்டரீதியான பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே பதவிவகிக்கின்றார். எனவே, அரசமைப்புக்கு முரணானவகையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரின் கட்டளைகளுக்கு அடிபணியவேண்டாம் என அரச ஊழியர்களிடமும், பாதுகாப்பு படையினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபைமுதல்வர் என்ற அடிப்படையில் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராகவே இருக்கின்றது. எம்மால் முடியாவிட்டால், மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிப்பாராயின், எதிரணியில் அமர்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் கூறினார்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் துரோகத்தை என்றும் மறந்துவிடமாட்டோம் என ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.