முஸ்லிம் கட்சிகளின் வெளிச்சாயம் விரைவில் அம்பலமாகும்! – தே.ஜ.ம.கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார்
“முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை நள்ளிரவு வழங்கிவிட்டு தற்போது தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதன் பின் தங்களையும் சமூக அக்கரையுள்ளவர்களாக காட்ட முற்படுகின்றனர்.’’
– இவ்வாறு தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர். எஸ்.எல்.றியாஸ் விசனம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் உரிமை மற்றும் கோட்பாடு விடயங்களில் வெளிப்பூச்சில் வியாக்கியணம் கூறுகின்ற எமது தலைவர்கள் அத்தனையும் விட்டுவிட்டு அடியில் நின்று கொண்டு அத்திவாரத்தை அளப்பவர்களாகவே இருக்கின்றனர் என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.
இவர்கள் யாருக்குமே உண்மையான சமூக உணர்வுகள் இல்லை. தங்கள் சுக போகங்கள் மற்றும் அமைச்சுக்கள் உட்பட அந்தஸ்துக்கள் முதலானவற்றையே அதிகம் சிந்திங்கின்றார்கள் என்பது திட்டவட்டமாகின்றது.
இவர்கள் உண்மையான சமூக அக்கரையுள்ளவர்களாக இருந்தால்,
01. கடந்த காலங்களில் அரசாங்கங்களுடன் கூட்டு சேரும் போது நீங்கள் கேட்ட உரிமைகள் என்ன? ஒப்பந்தம் என்ன? வெளியிட முடியுமா?
02. தற்போது நீங்கள் கேட்கும் சமூகம் சார்ந்த உரிமைகளின் பட்டியலை பொதுமக்கள் நலன் கருதி வெளியிட முடியுமா?
03. முஸ்லிம் சமூகத்தின் உரிமையை உத்தரவாதப்படுத்தும் கட்சிக்கே தங்களின் ஆதரவு என்ற உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். பாராட்டுகின்றேன்.
மஹிந்தவுடன் சேர்ந்தாலும் அல்லது ரணிலோடு தொடர்ந்தாலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வெளியிட முடியுமா?
பொறுத்திருந்து பார்க்கலாம் எதிர்வரும்; 16ம் திகதி இவர்களின் சாயம் வெளுக்கும்.’’ – என்றார்.