மஹிந்த வசமானது அரச ஊடகங்கள்! குண்டர்கள் புகுந்து அட்டூழியம்!! ஒளிபரப்புகள் நிறுத்தம்!!!

இலங்கையில் நேற்று கூட்டு அரசு பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். என்பனவற்றை மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், அரச ஊடகங்களுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முதலில் ஐ.ரி.என். தொலைக்காட்சி செய்தி அறைக்குள் நுழைந்த குழுவினர், அங்கிருந்த பணியாளர்களை தாக்கி வெளியே இழுத்துத் தள்ளினர்.

அதேவேளை, ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்திலும் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பங்களினால் ரூபவாஹினி தொலைக்காட்சி நள்ளிரவுக்கு முன்னர் செயலிழந்தது.

ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்கு மகிந்தவின் நெருங்கிய சகாவும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும் சென்றிருந்தார்.

அனைத்து அரச ஊடகங்களையும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச தொலைக்காட்சிகளான ஐ.ரி.என். மற்றும் ரூபவாஹினி என்பனவற்றை குண்டர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து, ஒளிபரப்புகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் பணியாளர்களும் துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அதனையும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

லேக் ஹவுஸ் நாளிதழ்களான டெய்லி நியூஸ், தினமின, சிலுமின ஆசிரிய பீடங்களை மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கங்கள் நேற்றிரவு கைப்பற்றியுள்ளன.

இதையடுத்து, டெய்லி நியூஸ் நாளிதழின் முன்பக்கம், மஹிந்தவின் ஆதரவாளர்களால் மாற்றப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உத்தியோகபூர்வமற்ற முறையில் நடந்த இந்த அதிகார கைமாற்றலின்போது வன்முறைகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஐ.ரி.என்., ரூபவாஹினியில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐ.ரி.என் செய்திப்பிரிவின் பிரதி பொது முகாமையாளர் சுபாஸ் வீரதுங்க ஜெயவர்த்தன, மஹிந்தவின் பதவியேற்புக்குப் பின்னர், திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

தம்மை உடனடியாக பணியகத்தில் இருந்து வெளியேறுமாறு ஆலோசனை கூறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“நான் எனது வாகனத்தில் ஏனைய இரண்டு பணியாளர்களுடன் வெளியேற முனைந்தபோது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தொழிற்சங்க ஆதரவாளர்களால் வாயிலில் முற்றுகையிடப்பட்டோம்.

மஹிந்தவின் ஆதரவாளர்கள், உங்களின் நேரம் முடிந்து விட்டது, கீழே இறங்குங்கள் என்று அச்சுறுத்தினர்.

அதையடுத்து ஐ.ரி.என். தொலைக்காட்சியின் நீண்ட காலப் பணியாளர்கள் வந்து எம்மை, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அவர்கள் பாதுகாப்பு வழங்கியதால்தான் வெளியேற முடிந்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபருடன்
மஹிந்த ஆலோசனை

இதேவேளை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் நேற்று நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு நள்ளிரவுக்கு சற்று முன்னதாக சென்ற பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மஹிந்தவுடன் கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துள்ளார்.

அதேவேளை, விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபரும் நேற்று நள்ளிரவு மஹிந்தவைச் சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *