‘ரோ’வுடன் தொடர்புடையவர்கள் யார்? – ஆதாரங்களுடன் அமரவீர வெளிப்படுத்த வேண்டும் என நாமல் வலியுறுத்து
“இந்தியாவின் ‘ரோ’ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து அமைச்சர் மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
“நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அமைச்சர்கள் இந்தியாவின் ‘ரோ’ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள் என்பதையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஆனால், தான் இருக்கும் அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி நம்பிக்கை இல்லாமல் மகிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
‘ரோ’ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும். அமைச்சர்கள் சிலர் ‘ரோ’ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று மகிந்த அமரவீர கூறியுள்ளமை பாரதூரமான விடயம். இது தொடர்பில் மகிந்த அமரவீர ஆதாரங்களை வெளிப்படுத்தவேண்டும். அவர்கள் யார் என்பதை மக்கள் முன்னிலையில் அறிவிக்க வேண்டும்” – என்றார்.