போர்க்களமானது நிலக்கல்! சபரிமலைக்குச் செல்லும் பெண்கள் வருவதைத் தடுக்கும் எதிர்ப்பாளர்கள் மீது பொலிஸார் தடியடி!!
நிலக்கல்லில் ஐயப்பன் பக்தர்களின் போராட்டத்தில் பொலிஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.
தடியடி நடத்திய பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் – எதிர்ப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற மோதலில் பக்தர்களில் சிலர் காயமடைந்தனர்.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆயிரக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்து, பா.ஜ.கா. உள்பட மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சபரிமலை கோயில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. ஐந்து நாட்களுக்குப் பிறகு 22ஆம் திகதி நடை அடைக்கப்படும். கோயிலுக்கு பெண்கள் வருவதைத் தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர். நிலக்கல்லில் பக்தர்கள் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், எதிர்ப்பாளர்களை கலைக்கும் நோக்கில் தற்போது நிலக்கல்லில் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த 3 பெண் நிருபர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் தற்போது போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதனால் நிலக்கல் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.