302 தேசிய பாடசாலைகளுக்கு விரைவில் அதிபர்கள் – வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
நாட்டில் உள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு, கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான நேர்முக பரீட்சை இன்று (16) முதல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்பொழுது அதிபர்களுக்கு குறிப்பிட்ட அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், ஆரம்பம் முதல் உரிய முறையில் வெற்றிடங்களுக்கு என, நேர்முகப் பரீட்சை நடத்தப்படாததனால் தேசிய பாடசாலை பலவற்றில் தகுதி உடைய வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்தது. சில அதிபர்கள், நீண்ட காலமாக ஒரே பாடசாலையில் பணியாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைவாகவே, தேசியப் பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்கும் பொருட்டு, தகுதி பெற்ற தர அதிபர்களை, பதவி தர அடிப்படையில் நியமிப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டடுள்ளது.
302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களைப் பூரணப்படுத்துவதற்கும், எட்டு வருட காலத்துக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் அதிபர்களை, ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்ற அரச சேவை ஆணைக் குழுவின் அங்கீகாரத்துடன், கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.