‘காமக்கொடூரனை தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பு’ – ஹட்டனில் போராட்டம்
தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அட்டன், லெதன்டி கார்பெக்ஸ் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இன்று (09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘மன்மத லீலைகளில் ஈடுபட்டு வரும் வெளிக்கள அதிகாரியை உடனடியாக வெளியேற்று’ என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
“ பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதற்கு குறித்த அதிகாரி முற்பட்டுள்ளார். இதனால், அவருடன் பணியாற்ற பெண்கள் அஞ்சுகின்றனர். இப்படியான மனிதனை எம் மண்ணில் வைத்திருக்க முடியாது.
தோட்டத்தால் வழங்கப்பட்ட விடுதியை தவறாகப் பயன்படுத்திவருவதுடன், தோட்டப்பெண்களுக்கும் தொந்தரவு வழங்கிவருகின்றார்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
குறித்த அதிகாரியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வழங்கப்பட்ட உத்தரவாதத்தையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச்சென்றனர்.
– ராம்-