மைத்திரி – ரணில் கூட்டு அரசு தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் என அமெரிக்கா விருப்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து முன்னேறவேண்டும் என்பதுதான் எனது கருத்தும் அமரிக்கத் துணைத் தூதுவருடைய கருத்துமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது இருவரும் தமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கத் துணைத் தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்ததவை வருமாறு:-
“தமிழ் மக்களுக்கு நன்மையைத் தரும் வகையில் யார் யார் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கத் துணைத் தூதுவர் வெளியிட்டார். அதனைத்தான் நானும் சொல்கிறேன் என்று அவருக்கு எடுத்துக் கூறினேன்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அவ்வாறான கருத்தை உடைய மக்கள் ஒன்று சேர்ந்ததால்தான் வேறுவிதமான சிந்தனைகளையுடைய கட்சிகளை முறியடிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். தங்களுடைய கருத்தும் அதுதான் என்று அவர் கூறினார்” – என்றார்.