ஐ.நாவில் இலங்கை அரசுக்கு காலநீடிப்பு கிடைக்க வாய்ப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிக்கும் உத்தேசம் சர்வதேசத்துக்கு உள்ளது என்பதையே அமெரிக்கத் துணைத் தூதுவருடனான சந்திப்பில் அறிந்துகொண்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் றொபேர்ட் கில்ரன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்றுமுன்தினம் மாலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போதே மேற்படி விடயத்தை தாம் அறிந்துகொண்டார் என்றார் விக்னேஸ்வரன்.

அமெரிக்க துணைத் தூதுவருடனான சந்திப்புத் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“வழக்கமாகக் கடைசி நேரத்தில்தான் இலங்கை அரசு ஏதாவது ஒன்றைச் செய்யும். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னர் (இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருடகால அவகாசம் நிறைவடையும் காலம்) ஏதாவது முக்கியமான விடயங்களை அரசு தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அமெரிக்கத் துணைத் தூதுவர் கூறுகின்றார்.

அதன் அர்த்தம் என்னவென்றால், இலங்கை அரசு இந்த முறை ஏதாவது கொஞ்சம் கொடுக்கும் – மேலும் கால நீடிப்பை வழங்கினால் பின்னர் இன்னும் கொஞ்சம் கொடுக்கும் என்ற வகையில்தான் அமெரிக்கத் தூதரின் கருத்து இருந்தது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *