விசேட செய்தியாளர் மாநாட்டில் ஐ.ஜி.பி. பங்கேற்காதது ஏன்?
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டம், ஒழுங்கு அமைச்சால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், பொலிஸ்மா அதிபரும் பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் அவர் பங்கேற்கவில்லை.
சட்டம், ஒழுங்கு அமைச்சில் நடைபெற்ற மேற்படி செய்தியாளர் மாநாட்டில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதியமைச்சர் நளிப் பண்டார, வடக்குமாகாணத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஜனாதிபதியினதும், எதிர்க்கட்சிகளினதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் பங்கேற்று, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்டம், ஒழுங்கு அமைச்சால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதால், அதற்கு பங்கம் ஏற்படக்கூடாது என்பதாலேயே பொலிஸ்மா அதிபர் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
” பொலிஸ்h மா அதிபர்இ பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதால் இன்றைய ஊடக சந்திப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, தெற்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள், ஆவாகுழு உட்பட மேலும் பல சம்பவங்கள் தொடர்பில் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நாட்டில் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளபோதிலும், படுகொலைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.