காசியப்பனின் கோட்டையில் அரைநிர்வாணமாக படமெடுத்த இளைஞர்களால் பெரும் சர்ச்சை
வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரையின் மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புனித பூமியையும், பௌத்த விழுமியத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிதுரங்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் தானியகம ஆனந்த தேரர், சீகிரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே – விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சீகிரியாவிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலேயே மேற்படி மலைப்பகுதி இருக்கின்றது. சீகிரியாவை காசியப்பான் ஆண்டபோது குறித்த பகுதியே அவனது கோட்டையாக இருந்துள்ளது.
அப்பகுதியை பார்வையிடுவதற்காக வெளிநாட்டவர்களும், உள்நாட்டவர்களும் தினந்தோறும் அங்கு செல்வதுண்டு. குறித்த வளாகத்துக்குள் நுழைபவர்கள் உரிய விழுமியங்களை பின்பற்ற வேண்டும். அரைகுறை ஆடைகளுடன் செல்லமுடியாது.
இந்நிலையிலேயே மலைப்பகுதிக்கு சென்று சில இளைஞர்கள் அரைநிர்வாணப்படமெடுத்து அவற்றை பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.