மலையகத் தமிழர்களைக் கைவிடோம்! – தொண்டாவிடம் தமிழக அமைச்சர் உறுதி
மலையகத்தில் வாழும் இந்தியா வம்சாவளி மக்களுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான ஆறுமுகன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக அமைச்சர் செங்கோட்டையன், தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவினரை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள ஆரம்பக் கைத்தொழில் அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த செங்கோட்டையன், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துள்ளார்.
ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.