பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! முப்படைகளும் ஊஷார் நிலையில்!! – ஜனாதிபதி தெரிவிப்பு
“தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இராணுவமானது பலமாகவே உள்ளது.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இந்தக் இக்கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
“தூக்கத்திலிருந்து திடீரென விழித்தவர்கள் உளறுவதுபோல், சிலர் நாட்டின் பாதுகாப்பு குறித்து கருத்து வெளியிடுகின்றனர். பாதுகாப்பு பலவீனமாகி விட்டதாகவும் விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் தவறான அறிவிப்பாகும்.
நாட்டின் பாதுகாப்பு பலமாகவே இருக்கின்றது. இராணுவமானது தயார் நிலையிலேயே உள்ளது. எமது படையினரை இன்று உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உரிய அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. பல நாடுகள் இராணுவ உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன.
போர் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு அமைச்சுக்கே இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகின்றது. அதில் நாம் எவ்வித குறைப்பையும் செய்யவில்லை. ஆனால், போர்க்காலத்தில் ஆங்காங்கே அவசர தேவைகளின் நிமித்தம் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அவை தற்போது தேவைப்படாது. இதையே தவறான விம்பத்தில் சிலர் பார்க்கின்றனர்.
அதேவேளை, படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்னும் ஒருவருக்கு எதிராகவேனும் வழக்குத் தொடுக்கப்படவில்லை. கைதும் அதன் பின்னர் பிணையுமே வழங்கப்படுகின்றது இதை வைத்துத்தான் இராணுவத்தை அரசு பழிவாங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர்”- என்றார்.