சந்தேகம் வேண்டாம்; எங்களை நம்புங்கள்! – மக்களிடம் கெஞ்சுகின்றார் மஹிந்தவின் தம்பி கோட்டா

“நாட்டு மக்கள் எம் மீது சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் எதிர்காலத்தில் உருவாக்கும் அரசில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழுமையான நடவடிக்கை எடுப்போம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரச தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இன்று தேசிய உற்பத்தியாளர் சர்வதேச வர்த்தகத்துடன் போட்டியிட முடியாத நிலையில், தேசிய உற்பத்தியாளர் தமது உற்பத்திகளை கைவிடும் நிலைமை உருவாகியுள்ளது. அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி பாதுகாத்து முன்னேற்ற வேண்டும்.

அது மட்டும் அல்லாது தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து குறுகிய காலத்தில் சமாதானத்தை உருவாக்கி அந்தச் சமாதானத்தை பாதுகாத்தோம்.

தற்போது துரதிஷ்டவசமாகவும், எமது பாதுகாப்பைப் பலவீனப்படுத்திய காரணத்தாலும் இந்த நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

மீண்டும் பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிகளை எடுக்கையில் மக்கள் சுதந்திரத்தைப் பறிக்கவே நாம் முயற்சிகளை எடுப்பதாகக் கூறுகின்றனர். அன்று நாம் போரை முடிக்க முன்வந்தது தமிழர்களைப் பாதுகாக்கவே. வடக்கு, கிழக்கு பகுதிகளையும் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல் மாற்றி அபிவிருத்தியின் பாதையில் கொண்டு சென்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *