உயர்நீதிமன்றத் தீர்ப்பை மைத்திரி ஏற்கவேண்டும்! – ரணில் கோரிக்கை
நாடாளுமன்றக் கலைப்பு அரசமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்துச் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர், ரணிலால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அதேவேளை, “ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சி அமைப்பதற்குரிய அழைப்பை ஜனாதிபதி விடுக்கவேண்டும். பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவேண்டும்”என்று ஐ.தே.கவின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்படி கோரிக்கையை விடுத்தார்.