புதிய அரசமைப்பு தேவையில்லை! – அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு
புதிய அரசமைப்பு தேவையற்றது என்று இலங்கையின் முக்கிய பௌத்த பீடமான அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரரை நேற்று மாலை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அஸ்கிரிய பீடம் என்ற வகையில், நாங்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசமைப்பு அத்தியாவசியமற்றது என்று கூறினோம். மகாநாயக்க தேரர்களும் அதனை வலியுறுத்தினர்.
சமகால அரசு மகாநாயக்க தேரர்களைக் கண்டுகொள்வதில்லை. இது யாருடைய தேவைக்கேற்ப வந்தது என்பது பிரச்சினைக்குரியது.
நாடாளுமன்றத்தில் பொது நிலைப்பாடு ஒன்றை பெற முடியாது. புதிய அரசமைப்பு ஒருபோதும் தேவையற்றது.
மாகாண சபைகளைக் கலைப்பதைத் தவிர தேர்தல் நடத்துவதற்கு எதுவித தேவையும் இல்லை.
பொதுமக்களுக்கு தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பத்தை தேர்தல் ஊடாக வழங்கவேண்டும்” – என்றார்.