அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடும் முடக்கம் – பிரேரணைமீது சபையில் இன்று வாக்கெடுப்பு!
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், மஹிந்த, மைத்திரி கூட்டணி அரசின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியம், மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணைமீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வை இன்றைய தினமும் மஹிந்த அணி புறக்கணிக்குமானால் மேற்படி பிரேரணை 123 வாக்குகளுடன் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் செயலகத்துக்கான நிதி ஓதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் நேற்று 123 எம்.பிக்கள் ஆதரவளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
” அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீ்ழ் நாடாளுமன்றமே அரசாங்க பொது நிதியை கட்டுப்படுத்துகிறது.
மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் கடந்த 15ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியத்தை பொது நிதியில் இருந்து வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.
அத்துடன் அரசாங்க பொது நிதியில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவோ, உள்நாட்டில் உலங்குவானூர்திகளில் பயணிக்கவோ முடியாது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அந்தப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்க, மனோ கணேசன், ஜெயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் இந்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.