முதலில் ஜனாதிபதித் தேர்தல்
இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் எப்போது நடத்தப்படுமென்று வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தலொன்றை எதிர்பார்த்துள்ளனர் மக்கள்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
என்றாலும், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பிரதான ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவும் பொதுத் தேர்தலையே விரும்புகிறது.
இந்த நிலையில், இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும், இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் இலங்கையில் உள்ள சகல சிறுபான்மையின மக்களும் ஒருவரை ஏகமனதாகத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது தற்போதைய நிலைமையில் சாத்தியம் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
வடக்கின் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நோக்கில் கடந்த சில வாரங்களாக பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.