நிறைவேறாமல் போன சாந்தனின் கடைசி ஆசை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பையாஸ், ஜெயக்குமார், முருகன், நளினி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக, 1999ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை அடுத்து நீதிமன்றம் பேரறிவாளன் மேல்முறையீட்டில் அவர் முதலாவது விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து, சாந்தன், ராபர்ட்பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் ஜெயக்குமார் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் அவர்கள் இலங்கை செல்ல முடியாது என்பதால் விடுதலை செய்யப்பட்டவர்கள் பல சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். இதே போல், ராபர்ட்பையாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு செல்வதற்காக சிறப்பு முகாமில் இவர்கள் பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மூலமாக இலங்கை செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாமில் இருந்த சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. சாந்தனுக்கு கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு இந்த அனுமதியை அளித்தது.

மேலும், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என கூறப்பட்டது.

32ஆண்டு களுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் இன்று இரவு இலங்கை செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி 7: 50 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். தற்போது திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பாயாஸ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *