தைவான் சீனாவுடன் இணைப்பதாக ஜனாதிபதி அறிவிப்பு!

தைவானை சீனாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று கொள்ளாமல் சீனா அந்நாட்டின் மீது உரிமை கொண்டாடி வருகிறது.

2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன ஜனாதிபதி சி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். சி ஜின்பிங், தனது உரையில், “தைவான், சீனாவுடன் இணைக்கப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடந்த வருடம் சி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், “தைவான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என அறிவித்திருந்தார். ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 8 வருடங்களாக தைவான் நாட்டை ஆண்டு வரும் ஜனநாயக வளர்ச்சி கட்சியை (Democratic Progressive Party) சேர்ந்த ஜனாதிபதி ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “மக்களின் உணர்வை பொறுத்தே சீனாவுடனான உறவு நிர்ணயிக்கப்படும்” என அறிவித்தார்.

தைவானின் மற்றொரு முக்கிய கட்சியான குவோமிண்டாங் கட்சி (KMT) சீனாவுடன் நட்பு ரீதியான உறவை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இராணுவ நடவடிக்கை மூலம் தைவானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *