குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த பணம் விரைவாக எடுக்கப்படுவதை அவதானித்த விசாரணை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய  34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு சலிந்துவின் பண முகாமையாளர் என கருதப்படும்  “லோகு முதலாலி” என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என்ற சந்தேகபரே கைதாகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அடியில் கொங்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் இருந்துள்ளது.

அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான குடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 வவுசார் ஆவணங்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *