பட்ஜட்டில் மகிந்த, கோட்டாவிற்கு ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களென உச்ச நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட முன்னாள் அதிபர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமற்றது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இரண்டு முன்னாள் அதிபர்களின் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமானதல்ல என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ரூ 84 மில்லியனில் இருந்து ரூ. 110 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் 66.7 வீதம் அதிபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 27 அமைச்சர்களுக்கும் 21 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமருக்கு 12 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.