இந்திய-இலங்கை படகு சேவை; ஜெய்சங்கரின் வருகைவரை ஒத்திவைப்பு

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்று (10) பயணிக்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. எனினும் தவிர்க்க முடியாத தொழிநுட்ப காரணங்களால் குறித்த கப்பல் இன்று வராது எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சேவைக்கான டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் 7500 முதல் 8000 வரை உள்ளதாகவும், பயணச் சீட்டைப் பெறுபவர் 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் ஒரு வழி பயணத்திற்கு 3 மணி நேரம் எடுக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை இடையே கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.  அண்மையில் இதற்கான ஒத்திகையும் இடம்பெற்றது.

இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் நபர் அல்லது இந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்கு வர விரும்பும் நபர் தொடர்புடைய பொதுவான சட்ட ஆவணங்களின் (விசா, பாஸ்போர்ட்) தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த கப்பலின் வருகை திடீரென ஒத்திவைப்பதற்கான காரணம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகையாக இருக்கலாமென இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

IORA மன்றம் மாநாட்டில் கலந்துகொள்ள நாளைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தில் பல்வேறு இராஜதந்திர மட்ட சந்திப்புகளிலும் எஸ்.ஜெய்சங்கர் ஈடுபட உள்ளார்.

எஸ்.ஜெய்சங்கரின் விஜயத்தின் பின்னர்தான் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *