எரிவாயு விலையில் இன்று மாற்றம்
எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று (04) அறிவிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைத் திருத்தம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இது தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தின் போது விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனம் விலையை திருத்தம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 561 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இதுவரை இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.