மேற்கத்திய தீவுகள் அணி வீரரின் ஊழல் குற்றச்சாட்டுக்களை ICC உறுதி செய்தது!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஊழல் தொடர்பான நான்கு குற்றங்களை செய்துள்ளமையை ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற T10 தொடரின் போது மார்லன் சாமுவேல்ஸ் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த தொடரில் ஒரு போட்டியிலும் சாமுவேல்ஸ் விளையாடியிருக்கவில்லை. இந்தநிலையில் குறித்த தொடரின் போது நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விதிமுறையை மீறி பரிசுப்பொருட்களை பெற்றமை, பணத்தை பெற்றுக்கொண்ட விடயத்தை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் அறிவிக்காமை மற்றும் இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமை போன்ற நான்கு குற்றச்சாட்டுகள் கடந்த 2021ஆம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணைகளை மேற்கொண்டது. அதன்படி இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்டதில் மார்லன் சாமுவேல்ஸ் நான்கு குற்றங்களையும் செய்துள்ளமையை சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

மார்லன் சாமுவேல்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் அவருக்கான தண்டனை தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்த சாமுவேல்ஸ் 71 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 67 T20i போட்டிகளில் விளையாடி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *