இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக ஆகஸ்ட் 6-ம் திகதி இமயமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் ஆக. 10-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கான இறுதிகட்டப் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் ‘காவாலா’, ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’ ஆகிய 3 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 2010-ம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்துவந்தார். கடந்த 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார். அதன்பிறகு கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லவில்லை. தற்போது மீண்டும் அடுத்த மாதம் இமயமலைக்கு செல்ல இருக்கிறார்.
அதன்படி, ஆக. 6-ம் திகதி இமயமலை செல்லும் ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் முகாமிடுகிறார். பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் அவர் செல்கிறார்.