ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பொதுவாகக் குளிரான காலநிலை நிலவும் ஐரோப்பியக் கண்டத்தில், தற்போது கடுமையான வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெப்பஅலையானது எதிர்வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என  ஐரோப்பிய விண்வெளி நிறுவன (ESA)  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6.00 மணிவரை நேரடி சூரியஒளியைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் வயோதிபர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களை இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இத்தாலியின் ரோம் நகரில் நாளை (17.07.2023) 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும், செவ்வாய்க்கிழமை (18.07.2023) இது 43 பாகை செல்சியஸாக அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ரோம் நகரில் ஆகக்கூடுதலாக 2007ஆம் ஆண்டு 40.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 00 கிறீஸின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 44.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

இத்தாலியின் சிசிலி தீவில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

ஆக்கக்கூடுதலான வெப்பநிலை
இதுவே ஐரோப்பாவில் பதிவான ஆக்கக்கூடுதலான வெப்பநிலையாகும்.

இதேவேளை, ஸ்பெய்ன், பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு முதலான நாடுகளிலும் கடும் வெப்பநிலை நிலவும் என ஐரோப்பிய விண்வெளி நிலயம் தெரிவித்துள்ளது.

தரை மற்றும் கடல் வெப்பநிலைகளை செய்மதிகள் ஊடக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) கண்காணித்து வருகிறது.

அமெரிக்காவில் வெப்பநிலை
அமெரிக்காவில் புளோரிடா, டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிஸோனா, வொஷிங்டன் உட்படப் பல மாநிலங்களிலும் கடும் வெப்பநிலை நிலவுகிறது.

நேற்று முன்தினம் 113 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

ஆசிய நாடான ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்றும் (16.07.2023) நாளையும் (17.07.2023) 39 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியாவின் வட பகுதியில் கடும் வெப்பநிலைக்குப் பின்னர், கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், 90 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *