டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச,தனியார் துறைகள் பொதுமக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் இயலுமை காணப்படுகின்றது.

எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.

டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். டெங்கு என்பது ஒருவகை வைரஸ் ஆகும். டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் கடிக்கும் பட்சத்தில் அந்த நுளம்பினால் ஏனையவர்களுக்கு டெங்கு நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். அதனால் டெங்கு கட்டுபாட்டிற்கு இந்த காரணங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஙஸஙநீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கூடும். எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூற்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *