இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்லக்கூடாது என ஜாவித் மியன்டாட் தெரிவிப்பு!
எதிர்வரும் உலகக் கோப்பை தொடர் உட்பட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக் கூடாது என தங்கள் நாட்டு அணியை வலியுறுத்தி உள்ளார் பாக். அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட். முதலில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வரட்டும். அதற்கான ஒப்புதலை பிசிசிஐ வழங்கும் வரை பாகிஸ்தானும் அங்கு அறவே செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வரும் அக்டோபர் 15-ம் தேதி அன்று விளையாட உள்ளதாகத் தெரிகிறது. இது ஐசிசி வெளியிட்டுள்ள வரைவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாவேத் மியாண்டட் இதனைத் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் அணி கடந்த 2012 மற்றும் 2016-ல் இந்தியாவில் விளையாடி உள்ளது. இப்போது இந்திய அணி தான் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். இது அவர்களது முறை. நான் முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தால் நிச்சயம் அங்கு சென்று விளையாடவே மாட்டேன். அது உலகக் கோப்பை என்றாலும் சரி. பாகிஸ்தான் எப்போதுமே அங்கு சென்று விளையாடத் தயாராக உள்ளது. ஆனால், அவர்கள் (இந்தியா) அப்படி இருப்பதில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் தரமான வீரர்களை உருவாக்கி வருகிறது. அதனால் நாம் அங்கு சென்று விளையாடாவிட்டாலும் அது நமக்கு பெரிய மாற்றத்தை கொடுக்காது. நாம் நமக்குப் பக்கத்தில் யார் இருக்க வேண்டும் என ஒரு போதும் தேர்வு செய்ய முடியாது. அதனால் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செல்ல வேண்டியது அவசியம். கிரிக்கெட் விளையாட்டு பரஸ்பரம் மக்களை நெருக்கமாகக் கொண்டு வரும் விளையாட்டு. இரு நாடுகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளையும் அகற்றும் தன்மை கொண்ட விளையட்டு என்று நான் எப்போதும் சொல்வேன்.
இதோ இப்போது கூட பாருங்கள் பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி வரவில்லை. அதனால் நாமும் நமது தரப்பில் ஸ்திரமான முடிவை எடுக்க வேண்டும்” என அவர் சொல்லியுள்ளார்.
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இருந்தாலும் இந்தத் தொடர் ஹைபிரிட் மாடலில் நடைபெறுகிறது. இதன்படி இந்திய அணி பங்கேற்காத 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும். மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும். “ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை. அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.