ஆங்கில மொழியை தேசிய மொழியாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை!

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன.

அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.

இது பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாம் மீண்டெழும் நேரமாகும். இந்நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்பட்டால் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியால் வருமானம் ஈட்ட வேண்டும். நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றினையும் உருவாக்க வேண்டும்.

கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம். தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது. அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார் குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும் 2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை.

நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.

அதேபோல் எமது பல்கலைக்கழக கட்டமைப்பினையும் நவீனமயப்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் காலத்தை 3 வருடங்களா அல்லது 4 வருடகங்களா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் அரச பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்த வேண்டும்.

தற்போது, ஆண்டுக்கு சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். மேலும் ஒரு குழுவினர் வெளிநாடு செல்கிறனர். இன்னும் சிலர் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளனர். எனவே, அரச பல்கலைக்கழகங்கள், தேசிய பல்கலைக்கழகங்களைப் போன்று அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் நாம் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *