ஒரே மேடையில் பாடி அசத்திய இசை,வைகைப் புயல்கள்!

மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் வடிவேலு இணைந்து மேடையில் பாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாமன்னன்’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானும், வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலுவும் மேடையில் இணைந்து பாடியதுதான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. வடிவேலுவை மேடைக்கு அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலுவின் தோளில் கைவைத்து, ‘அண்ணன் வடிவேலு மிகச்சிறந்த பாடகர்’ என்று புகழாரம் சூட்டினார். பின்னர் இருவரும் இணைந்து ‘சங்கமம்’ படத்தில் மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய ‘ஊருக்காக ஆடும் கலைஞன்’ என்று தொடங்கும் வரிகளை பாடினர். பின்னர் ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ராசாக்கண்ணு’ பாடலை வடிவேலு மேடையில் பாடினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *