கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான ஆணழகன் திருமணம்!

 

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகவும் உயரம் குறைவான ஆணழகன் ஒருவரது திருமணம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உடற்பயிற்சியில் ஆர்வம்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரதீக் விட்டம் மொஹிதே என்பவர் மிகவும் குறைவான மனிதராவார்.

அவரது மொத்த உயரமே 3.4 அடி தான். அவருக்குள் வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் எண்ணம் துளிர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.

சக மனிதர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாக இருக்கும் தம்மை பலரும் மதிக்க வேண்டுமென்றால் வாழ்வில் எதையாவது செய்து சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு இருந்திருக்கிறது.

தனது நண்பர்கள் உதவியுடன் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய துவங்கிய அவருக்கு அதன் மீது அதீத ஆர்வம் வந்துள்ளது. ஆனாலும் தனது உடல் வாகுவிற்கு ஏற்ப உடற்பயிற்சி உபகரணங்கள் இல்லை என மனமுடைந்து போனார்.

கின்னஸ் சாதனை

பின் தனது நண்பர்களிடம் இதனைப் பற்றி வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். அதன் பின்பு அவரது உடல்வாகுக்கேற்ப சிறிய உபகரணங்களை அவரது நண்பர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர் வீட்டிலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார். சரியான உணவுக் கட்டுப்பாடு மற்றும் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை உடற்பயிற்சி என தனது உடலை முறுக்கேற்றியுள்ளார்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அவர் பாடிபில்டர் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார்.

தனது நண்பர்களின் உதவியால் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைத்த அவருக்கு உலகின் குள்ளமான பாடிபில்டர் பங்கேற்பாளர் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்தது. அதன் பின் அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவரானார்.

அழகிய காதல் கதை

27 வயதான பிரதீக் விட்டம் மொஹிதேவிற்கு எப்படியாவது திருமணம் நடத்தி விட வேண்டுமென பெண் தேடும் படலத்தில் இறங்கினர்.

அப்படித்தான் பிரதீக், ஜெயா என்ற பெண்ணோடு அறிமுகமானார். ஜெயா உடல் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.

அவரது மொத்த உயரமே 4.2 அடி தான். ஜெயாவிற்கு பிரதீக்கை பிடித்து விடவே நிச்சயதார்த்தம் ஆனது.

”ஜெயாவிடம் நான் பேச தொடங்கியபோது மிகவும் நம்பிக்கையுடன் பேசினேன். ஏனெனில் அவளுக்கும் என்னை பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது” என பிரதீக் கூறியுள்ளார்.

தனது நண்பர்களுக்கு பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்து வருவது ஜெயா தான் என கூறியுள்ளார்.

“நிச்சயதார்த்தம் ஆன சில நாட்களிலே நாங்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். எங்களால் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாது. நான் அவளை உணர்வுப் பூர்வமாக காதலித்தேன்.

காதல் எல்லா மனிதனுக்கு அவசியமாகிறது. இருவருக்குமான புரிதல்களே காதலை வழி நடத்துகின்றன. எங்களுக்கு திருமணமாகிவிட்டது. இனி வாழ்வின் இனிமையான நாட்களைச் சந்திக்க போகிறேன்” என பிரதீக் கூறியுள்ளார்.

இவர்களது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *