மது தேவை குறைந்ததால் காலாவதியான நிலையில் கிடங்குகளில் கிடக்கும் பியர்கள்!
சில மதுபான நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பியர் காலாவதியான நிலையிலும் கிடங்குகளில் குவிந்து கிடப்பதாக கலால் திணைக்களம் குறிப்பிடுகிறது.
மது விற்பனை 30 சதவீதம் குறைந்ததே இதற்குக் காரணம்.
இந்நிலைமையால் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், உள்ளூர் மதுபான விற்பனை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் கலால் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
22 பில்லியன் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 30-35 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையாளர் கூறுகிறார்.
கடந்த காலங்களில் எதனோலின் விலை வேகமாக அதிகரித்துள்ள போதிலும் எதனோலின் விலை குறைந்துள்ளதாகவும் இலங்கையில் எதனோல் உபரியாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்படி இருந்தும், இலங்கையில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள பின்னணியில், அரச ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்கள் கைகளில் குறைந்த அளவு பணம் இருப்பதால், மதுபானம் வாங்குவதற்கான உந்துதல் குறைவாக இருப்பதாக கலால் திணைக்களம் கூறுகிறது.
இதன் காரணமாக, இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கான 214 பில்லியன்களை எட்டுவதற்கு பல்வேறு உத்திகளை கடைபிடிக்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.