மனைவியை 11 ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைத்த கணவன்!
ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகள் தன்னுடைய மனைவியை வீட்டில் அடைத்திருந்த கணவரின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இருட்டறையில் அடைக்கப்பட்ட மனைவி
ஆந்திரா மாநிலம் விஜய நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதனனுக்கும்,புட்டபர்த்தி பகுதியைச் சேர்ந்த சாய் சுப்ரியா என்பவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்குப் பின் மதுசூதனது பெற்றோருக்குச் சாய் சுப்ரியாவின் நடத்தையில் சந்தேகமிருப்பதாகக் கூறி அவரை வீட்டில் அடைக்கச் சொல்லி மகனிடம் கூறியிருக்கிறார்கள்.
இதனால் தனது மனைவியை மதுசூதனன் இருட்டறையில் அடைத்து வைத்துள்ளார். சுப்ரியாவின் பெற்றோர் வந்தால் கூட பார்க்க அனுமதிப்பதில்லை. கடந்த 11 வருடங்களாக இது தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் சுப்ரியாவின் பெற்றோருக்குச் சந்தேகம் வரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உடைக்கப்பட்ட கதவு
மதுசூதனது வீட்டைப் பார்வையிடக் கூட பொலிஸாரை அவரது பெற்றோர் அனுமதிக்க மறுத்துள்ளனர்.மேலும் சந்தேகம் வலுவாக காவல் துறை இருட்டறையின் கதவை உடைத்து சுப்ரியாவை மீட்டுள்ளனர். சுப்ரியா மிக மெலிந்த நிலையில் பரிதாபமாக இருந்துள்ளார். இதன் பின் மதுசூதனது குடும்பத்தின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் பெண்கள் மீதான ஒடுக்குமுறை குடும்பங்களில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு இது போன்ற செயல்களைச் செய்யும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுப்ரியா தரப்பு வாதம் கூறியுள்ளது.