மூன்றில் 2 பகுதி பனிப்பாறைகள் அழிந்துவிடும் அபாயம்!
உலகின் பனிப்பாறைகளில் மூன்றில் 2 பகுதி இந்த நூற்றாண்டிற்குள் அழிந்துவிடக்கூடும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்ந்தால் இந்த நிலைமை ஏற்படும் என Science சஞ்சிகையில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிரீன்லந்து (Greenland), அண்டார்ட்டிக்கா (Antarctica) ஆகியவற்றைத் தவிர்த்து உலகின் மற்ற பகுதிகள் அனைத்திலும் உள்ள பனிப்பாறைகள் ஆய்விற்காகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதன்படி உலக வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் நூற்றாண்டின் முடிவிற்குள் பனிப்பாறைகளில் கிட்டத்தட்ட பாதி காணாமல் போய்விடும்.
ஆனால் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு தற்போதைய 2.7 டிகிரி செல்சியஸில் தொடர்ந்தால் 68 விழுக்காட்டுப் பனிப்பாறைகள் அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
பனி உருகினால் கடல் மட்டம் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதோடு 2 பில்லியன் பேருக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.